weather

img

இந்தியாவிலும் காலநிலை அகதிகள்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஒரு இரவு இருட்டி பொழுது வெளுக்கும் விடியலில் புயற்காற்று கவர்ந்துசெல்லும் மேற்கூரை. வாசல் படி தாண்டி வரும் மழைநீர். மண்ணின் அடியில் புதையும் உயிர்கள். இந்தியா இது போன்ற சம்பவங்களில் நடுங்கி நிற்கத்தொடங்கி ஆண்டுகளாகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் விருந்தாளியாக வரும் பேரிடரும், பெருவெள்ளப்பெருக்கும் மிச்சம் வைப்பதைப் பெருக்கிக் கூட்டி அவர்கள் புதிய வாழ்வில் காலூன்றுகின்றனர். சில சமயங்களில் சொந்த மண்ணையும் பிரியமான எல்லா வற்றையும் கை விட்டு புதிய தரையில் இவர்கள் குடியேறவேண்டி வருகிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் நீண்ட தொலைவு நீடித்திருக்கும் பாதிப்புகளில் ஒன்றே காலநிலை குடியேற்றம் (climate migration). 2008ல் மட்டும் உலகம் முழுவதும் 2 கோடி பேர் காலநிலை சீரழிவைத் தொடர்ந்து அகதிகளாயினர். இது இருபது கோடியாக மாற அதிக காலம் தேவைப்படாது என்று ஐ.நா கணக்குகள் கூறுகின்றன. கடற்சீற்றம், வெள்ளப்பெருக்கு, புயற்காற்று, வறட்சி போன்ற பேரிடர்களால் நாட்டிற்குள்ளும் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த இடத்தை விட்டு வேறு இடங்களுக்குக் குடியேறுகின்றனர். 2020ல் மட்டும் 3 புயல்கள் நாட்டில் ஆயிரக்கனக்கானோரை வீடு வாசல் இழக்கச்செய்தது. வெப்ப அலைவீச்சு, பெருவெள்ளம் உள்ளிட்ட இடர்களால் 2020-2021ல் 6000 குடும்பஞ்கள் வீடு விட்டு போகவேண்டிவந்தது. மேற்குவங்கத்தின் சுந்தர்பன் பகுதியில் இருந்து கேரளா, தமிழ்நாட்டிற்கு காலநிலை குடியேற்றங்கள் நடக்கின்றன. வருங்காலத்தில் இது இன்னும் மோசமாகும் என்று இடம்பெயர்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் (Centre for migration& inclusive development) இயக்குனர் டாக்டர் பினோய் பீட்டர் கூறுகிறார். இந்த நிலை மாநிலங்களுக்குள்ளேயும் நடக்கிறது. பேரிடர்கள் விவசாய நிலங்களை வேளாண்மை செய்யத் தகுதியற்றதாக்குகின்றன.

காலநிலை குடியேற்றங்கள் என்றால் என்ன?
திடீரென்று அல்லது நீண்டகாலம் ஏற்படும் காலநிலைப் பிரச்சனைகளால் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்த இடம் மற்றும் வீடையும் விட்டு வேறு இடங்களுக்கு சென்று வாழ வேண்டி நேரிடுவதே காலநிலை குடியேற்றம் எனப்படுகிறது. வறட்சி, பாலைவனமாதல், கடல் நீர்மட்ட உயர்வு, புயல்கள், அசாதாரணமான காலநிலை போன்றவற்றால் சொந்த இடத்தில் வாழமுடியாத நிலை, விவசாயத் தொழிலில் ஈடுபடமுடியாத நிலை போன்றவற்றால் இவர்கள் அகதிகளாக்கப்படுகின்றனர்.
ஊரை விட்டு ஓடவைக்கும் காலநிலை மாற்றம்
இதனால் மக்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வேறு பகுதிகளுக்கு வேருடன் பிடுங்கி எறியப்படுகின்றனர். சூழல் சுரண்டல், அதைத் தொடர்ந்து ஏற்படும் காலநிலை மாற்றம் இந்தியர்களை குடியேறிகளாக்குகிறது.
உலகம் மறக்கும் அகதிகள்
காலநிலை குடியேறிகள் யார்? அமெரிக்க சூழல் நிபுணர் லெஸ்ட்டர் ப்ரவுன்ன் 1976ல் “காலநிலை அகதிகள்” (Climate refugees) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார். இவர்கள் அகதிகளில் ஒரு பிரிவினர். ஆனால் உலக நாடுகள் மற்றும் ஐ நா இவர்களை இன்னமும் அகதிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உருவாக்கப்பட்ட அகதிகள் என்ற சொல்லில் இன்னமும் காலநிலை அகதிகள் உட்படுத்தப் படவில்லை.
அங்கீகாரம் இல்லாமல் அனாதையாக்கப்படுபவர்கள்
தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களில் இவர்கள் பற்றி தெளி வான விளக்கங்கள் எவையும் இல்லை. இதனால் இவர்களுக்கு அகதிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பும் மறுக்கப்படுகிறது. இடம் பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (Internal displacement monitoring centre) கணக்குகளின்படி 2019ல் மட்டும் உலகில் பல நாடுகளிலும் 7 இலட்சம் பேர் குடியேறிகளாயினர். இதே காலகட்டத் தில் போர் மற்றும் மற்ற காரணங்களால் அகதிகளானவர்களின் எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்கு.
இந்தியாவில் அகதிகள்
ஆசிய பசிபிக் பகுதியில் 2010-11ல் 42 இலட்சம் பேர் வீடு வாச லிழந்து அகதிகளாயினர். காலநிலை அகதிகளில் 80 சதவிகிதமும் பெண்களே என்று பிபிசியின் 2018 அறிக்கை கூறுகிறது. 2020ல் மட்டும் 3,856 மில்லியன் பேர் இந்தியாவில் சூழல் பிரச்சனை களால் மற்ற இடங்களுக்கு இடம்பெயர வேண்டி நேரிட்டது என்று இடம்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஐ.நா.வின் ஆய்வுகள்படி உலகில் காலநிலை மாற்றம் தீவிரமாக பாதிக்கும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
கங்கையும் பிரம்மபுத்திராவும்
கங்கை, பிரம்மபுத்திரா போன்ற பெருநதிகள் காலம் காலமாக கரை கவிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மனிடக் குறுக்கீடுகள், காலநிலை மாற்றம் போன்றவை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. இரண்டாண்டுகளுக்குள் நான்கு புயல்களுடன் போராட வேண்டிவந்த மேற்குவங்காளம் சுந்தர்பன்னில் கோருமாரா, முன்சுனிக் தீவுகளில் மக்கள் முழுமையாக வேறு இடங்களுக்குக் குடிபெயரச் செய்யப்பட்டனர். இந்த இடங்கள் மனிதன் வாழத் தகுதியற்றதாயின. இவ்வாறு குடிபெயர்பவர்களின் வாழ்க்கைநிலை பற்றி ஆய்வுகள் குறை வாகவே நடக்கின்றன. கேரளாவிற்கு தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம், ஆகிய 8 மாநிலங்களில் இருந்து அகதிகள் குடியேறுகின்றனர். இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷில் அமைந்துள்ள சுந்தர்பன் பகுதியே காலநிலை மாற்றத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும் பகுதி. ஒடிசாவில் கேந்திரபாரா மாவட்டத்தில் இருந்து ஏராளமான குடும்பங்கள் ஆண்டுதோறும் கடல்நீர் மட்ட உயர்வினால் மற்ற இடங்களுக்கு குடியேறுகின்றனர். கேரளாவில் ஆழ்கடலிற்கு மீன் பிடிக்கச் செல்பவர்களில் பெரும்பாலோனோர் மேற்கு வங்காளத்தில் சுந்தர்பன்னில் இருந்து வந்தவர்களே. கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் வட இந்தியாவில் இருந்து வந்த அகதிகள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குடியேறிகளின் பிரச்சனைகள் மற்றும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சமூக பாதுகாப்பை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதில்லைஎன்று இடம்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் கடல் மீன்பிடி தொழில் என்ற கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இயற்கை எப்போது எவ்வாறு நடந்துகொள்ளும் என்று தெரியாமல் காலநிலை அகதிகள் வாழ்கின்றனர்.
பதில் இல்லாமல் போகும் கேள்விகள்
காலநிலை மாற்றம் தெருவில் விரட்டிவிடும் சாமான்ய மக்களின் மறுவாழ்வும் சூழல் பாதுகாப்பைப் போலவே அத்தியா வசியமானது. உலகின் அகதிகள் பட்டியலில் தெளிவான வகையில் உட்படுத்தப்படாமல் வெளியில் நிற்கும் இவர்களின் பிரச்சனைகளில் தேசிய, சர்வதேச கவனம் உடனடியாகத் தேவை. சூழல் சீரழிவால் இந்நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்றாலும் அகதிகளாக்கப்படுபவர்களின் சமூக, பொருளாதார சூழ்நிலை களுடன் இவற்றிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியாவில் இவ்வாறு அகதிகளாக்கப்படுபவர்களில் மீன்பிடி தொழிலாளிகள், பாரம்பரிய விவசாயிகளே அதிகம். அந்நிய மாநிலத் தொழிலாளிகள் என்ற பொதுப்பெயருடன் இவர்கள் அழைக்கப்பட்டாலும் இவர்களின் இடம்பெயர்விற்கான உண்மையான காரணங்கள் ஆராயப்படுவதில்லை. இவர்கள் நாட்டையும் வீட்டையும் பாரம்பரியத் தொழிலையும் விட்டுவிட்டு பிற மாநிலங்களில் அடைக்கலம் தேடுகின்றனர். குடிபெயரும் இடங்களிலும் இவர்கள் சூழல் பேரிடர்களை சந்திக்கின்றனர்.
அபயம் எங்கே?
செல்லும் இடங்களும் பேரிடர்களால் பாதிக்கப்படும்போது இவர்கள் வாழ்க்கை பரிதாபமாகிறது. “ஒட்டுமொத்த உலகையும் காலநிலை மாற்றம் பாதிக்கிறது என்றாலும் எல்லோரையும் இது ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை” என்று ஐ நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கி முன் கூறிய சொற்களை  உலகம் இன்று அவசரமாக கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இவர்களின் இந்த நிலைக்கு யார் பொறுப்பு? இவர்களுக்கு அடைக்கலம் தருபவர் யார்? என்றுவிடியும் இவர்களின் வாழ்வு?